Tuesday, 21 February 2012

அம்மா

அம்மா (என் செல்ல அம்மாவுக்கு)
என் முகம் பார்க்கும் முன்னே என் மேல் காதல் கொண்டவள்.

என் உயிர் காக்க, சுவை மறந்து பத்திய சோறுண்டவள்.

ஈரைந்து மாதம் தன் கருப்பைக்குள் என்னை காத்தவள்.

எட்டி நான் உதைத்த போதும் அதில் இன்பத்தை மட்டுமே கண்டவள்.

உயிர் போகும் வலித் தந்தேன் அமைதியாக ஏற்றுக் கொண்டு என்னை இந்த உலகிற்கு அறிமுகப் படுத்தியவள்.

சொந்தங்கள் சூழ்ந்திருத்த போதும் மயங்கிய விழிகளுடன் என்னைத் தேடியவள்.

பெண் பிள்ளை என்றதும் பேரின்பத்தில் முத்த மழை பொழிந்தவள்.

கண் இமைக்குள் வைத்து என்னை காத்து வந்தவள்.

நான் சோறுன்ன நிலவை துணைக்கு அழைத்தவள்.

என் பிஞ்சுக் கரமப் பிடித்து எழுதக் கற்றுத் தந்தவள்.

என்னை அலங்கரித்து பார்த்து ஆனந்தப் பட்டவள்.

நான் கன்னி ஆனதும் கணவனை விட்டு விலகியவள்.

எனக்காக தன் சுகம் மறந்தவள். சுமை தெரியாமல் என்னை வளர்த்தவள்.

கற்பத்தில் வாயைக் கட்டியவள், என் எதிர்காலத்திற்க
்காக வயிற்றைக் கட்டியவள்.

சிக்கனமாய் செலவு செய்பவள். என் தேவைகைளை நிறைவேற்றுபவள்.

தன் சோகத்தை மறைத்தவள். சுகத்தை மட்டும் பகிர்ந்துக் கொண்டவள்.

பொறுப்புடன் வரன் பார்த்தவள். என் பிரிவு தாங்காமல் துடித்தவள்.

விழி நீரோடு எனக்கு விடைக் கொடுத்தனுப்பியவள்.

என் நினைவுகளோடு நாட்களை துரத்தி அடிப்பவள்.

விடுமுறை நாட்களில் எனக்காக வழி மீது விழி வைத்து காத்துக் கிடப்பவள்.

குறை இன்றி சீர் செய்தவள். பெற்றவர்களின் பேர் காக்கும் படி நடக்கும் பண்பை சொல்லித் தந்தவள்.

நன் உண்டான செய்தி அறிந்ததும் உள்ளம் பூரித்தவள்.

உள்ளங்கையில் என்னைத் தாங்கியவள்.

சிறப்பாக சீமந்தம் செய்தவள். அதை சொல்லி சொல்லி ஆனந்தப் பட்டவள்.

பிரசவ வலியில் நான் துடிக்கையில், அதை காண முடியாமல் பூ மனம் துடித்தவள்.

பிறந்தது பிள்ளை நிலா தாயானேன் அவள் சேய் நான்.

சுற்றங்கள் அனைத்தும் என் பிள்ளையை சூழ்ந்துக் கொண்டிருக்க,அவள் மட்டும் அருகில் வந்து என் கேசம் தடவிக் கொடுத்துக் கேட்கிறாள்

"உன் உடல் எப்படி இருக்கு என்று"

மீண்டும் குழந்தையானேன் அன்பின் உருவமான என் அன்னையின் மடியில்.

No comments:

Post a Comment